மலேசிய விடுதலை வரலாற்றின் சில பக்கங்கள்

 

பயங்கரவாதிகள் யார்?
சின் பெங்ஙா அல்லது பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளா?

ஜீவி காத்தையா

 

பாகம் 2

 

பிரிட்டீஷாரின் நம்பிக்கை துரோகம்

 

ஜப்பானுக்கு எதிரான போரில் பிரிட்டீஷாருக்கு ஆதரவாகச் செயல்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்பார்ப்புகள் இராணுவப் பதக்கங்களுக்கும் ஒபிஇ விருதுகளுக்கும் அப்பாற்பட்டவை. அக்கட்சி விரும்பிய தெல்லாம் இந்நாட்டு அரசியலில் ஈடுபடு வதற்குத் தேவையான அங்கீகாரம். மலாயாவிற்குச் சுய ஆட்சி வேண்டும் என்ற அதன் கொள்கையை அக்கட்சி தெள்ளத் தெளிவாக அறிவித்திருந்தது.


பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் மலாயாவிற்கு மீண்டும் வந்தது மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கல்ல. அவர்களது திட்டம் வேறு. பிரிட்டனின் பொருளாதார மீட்சிக்குத் தேவையான ரப்பர் மற்றும் ஈயத் தொழில்களை மீண்டும் செயல்படச் செய்தல், மலாயாவில் இயங்கி வந்த சக்தி வாய்ந்த தொழிற்சங்க இயக்கத்தை அழித்தல், மற்றும் மலாயாவில் பிரிட்டீஷாரின் நேர்முக ஆட்சியை அமைத்தல், ஆகியவை தாம் பிரிட்டீஷாரின் உடனடித் திட்டம்.


இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பிரிட்டீஷார் மிகக் கவனமாக நடந்து கொண்டனர். ஏனென்றால், அன்றைய சூழ்நிலையில் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி 10,000 வீரர்களைக் கொண்ட இராணுவ அணியையும், சக்தி வாய்ந்த தொழிலாளர் அணியையும் தன்னகத்தே கொண்டி ருந்த ஒரு பெரும் அரசியல் சக்தியாக விளங்கியது. அடுத்து மலாயா தேசியவாதிகள் கட்சியும், அங்காத்தான் பெமூடா இன்சாப் (அப்பி) என்ற அமைப்பும் இருந்தன. இவ யும் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகவே செயல்பட்டன. அம்னோ, மஇகா மற்றும் மசீச என்ற அமைப்புகள் அப்போது கிடையாது.


முதலில் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவ அணியான மலாயா மக்கள் ஜப்பானியர் எதிர்ப்புப் படையைக் கலைப்ப தற்கான நடவடிக்கைகளில் மலாயாவின் பிரிட்டீஷ் இராணுவ நிர்வாகம் இறங்கியது. பிரிட்டீஷா ரால் மிகவும் பாராட்டப்பட்ட இந்த இராணுவ அணியை மலாயாவின் தேசிய பாதுகாப்புப் படையுடன் இணைத்துவிட பிரிட்டீஷ் நிர்வாகம் மறுத்துவிட்டது. இறுதியில், மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவ அணி கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்ட இராணுவ அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சேவைத் தொகையில் பெரும் பாகுபாடு காட்டப்பட்டது.


மலாயா சீனர் சங்கம் மற்றும் கூட்டணிக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.எச். டான் இப்பாகுபாட்டைப் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்:
“பல ஆண்டுகள் காடுகளில் ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்ட எம்பாஜா போராளிகளுக்கு $300.00 தரப்பட்டது. இவற்றுடன் ஒப்பிடுகையில், பிரிட்டீஷ் கூட்டுப்படை மற்றும் மலாயா போர்க் கைதிகள், போர்க் கைதி முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டபோது ஒவ்வொருவருக்கும் $5000.00 கைப்பணம், மற்றும் வைத்தியசாலை வசதி, ஓய்வு, மேற்படிப்புப் போன்ற பலன்களை வழங்கப்பட்டன. காட்டுப் போராளிகளிடம் நடத்தப்பட்ட முறை அவர்களிடையே வெறுப்பு உணர்ச்சியை உருவாக்கியது."


மலாயா கம்யூனிஸ்ட் கட்சி ஒதுக்கிவிடப்பட்டது. அக்கட்சியைச் சார்ந்த தீவிரவாத போக்குடைய தொழிற்சங்கங்களை மிதவாத சங்கங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பிரிட்டீஷ் இராணுவ நிர்வாகம் தயாராகிக் கொண்டிருந்தது. இக்காலகட்டத்தில் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டீஷ் நிர்வாகம் மலாயாவிற்குச் சுய ஆட்சி வழங்க தயாராக இல்லை என்பதை உணர்ந்து கொண்டது.


திட்டமிட்டிருந்தபடி, பிரிட்டீஷ் இராணுவ நிர்வாகம் மலேயன் யூனியன் அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இவ்வமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் மலாயாவிலுள்ள ஒவ்வொரு மாநில சுல்தான்களிடமிருந்தும் கையொப்பம் பெறப்பட்டது. மலேயன் யூனியன் ஒப்பந்தத்தின் சரத்துகள் என்ன என்று தெரிந்து கொள்ளாமலே மாநில சுல்தான்கள் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தனர்!


திட்டமிட்டிருந்தபடி மலேயன் யூனியனில் மலேயாவின் அனைத்து மாநிலங்களும் ஆளுனரின் நேரடி ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டன. சுல்தான்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இஸ்லாமிய மதம் உட்பட. ஆளுனரின் அதிகாரமே இறுதியானது. சிங்கப்பூர் தனி காலனியாக்கப்பட்டது. சீனர்களும் இந்தியர்களும் சுலபமாகக் குடியுரிமை பெற வழிவகுக்கப்பட்டிருந்தது.


மலாயா கம்யூனிஸ்ட் கட்சி, மலாயன் யூனியன் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தது. அதற்குக் காரணம் அத்திட்டத்தில் மக்கள் ஆட்சிக்குத் தேவையான அமைப்புகளை உருவாக்குவதற்கும், நாட்டிற்கு சுய ஆட்சி வழங்குவதற்கும் வகை செய்யப்படவில்லை. மேலும், அத்திட்டம் சிங்கப்பூரை மலாயாவிலிருந்து பிரிப்பதற்கு வகை செய்திருந்தது. மலாயா கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்த திட்டத்தை முன் வைத்தது. ஆனால் அத்திட்டம் உதாசீனப்படுத்தப்பட்டது.


மலாயன் யூனியன் ஒப்பந்தம் வெளியானதும் நாடு முழுவதிலுமுள்ள மிதவாத மலாய்க்காரர்களிடமிருந்து அத்திட்டத்திற்கு எதிர்ப்பு உருவாகியது. அவர்கள் குறிப்பாக சுல்தான்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதையும், சீனர்களுக்கும், இந்தியர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த குடியுரிமை சலுகைகளையும் எதிர்த்தார்கள். அவர்கள் இங்குச் சீனர்களும், இந்தியர்களும் அதிக அளவில் இருப்பதைத் தங்களது வாழ்க்கைக்கு ஒரு மிரட்டலாக இருப்பதாகக் கருதினார்கள். இப்போக்கிற்கு மாறாக, மலாயா தேசிய கட்சி இந்நாட்டிலுள்ள எல்லா இனத்தவருக்கும் குடியுரிமை வழங்குவதை விரும்பியது. சிங்கப்பூரை மலாயாவிலிருந்து பிரிப்பதை அக்கட்சி கடுமையாக எதிர்த்தது. மலாயா தேசியக் கட்சி பிரிட்டீஷ்காரர்கள் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தது.


மிதவாத மலாய்க்காரர்கள் எதிர்த்தது மலாயன் யூனியன் கொள்கையை மட்டுந்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மிதவாத மலாய்க்காரர்கள் பிரிட்டீஷார் மலாயாவை ஆளுவதை எதிர்க்கவில்லை; அவர்கள் பிரிட்டீஷார் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதே இல்லை. “பிரிட்டீஷ் நீதி” இறுதியில் வெற்றி பெறும் என நம்பினார்கள். அவர்கள் தங்களின் மலாயா யூனியன் கொள்கை எதிர்ப்புப் பேரணியில் “தந்தையே, நாங்கள் வளர்கின்ற வரையில் எங்களைக் காப்பாற்றுங்கள்" என்ற வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை ஏந்திச் சென்றனர்.


மலாயா யூனியன் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிகளைக் கண்டறியும் நோக்கத்தோடு 42 மலாய்க்கார அமைப்புகள் ஒரு கூட்டத்தைத் கூட்டின. அக்கூட்டத்தில் தான் ஒன்றுபட்ட மலாய் தேசிய அமைப்பு (அம்னோ) உருவாக்கப்பட்டது. அக்கூட்டம் சுல்தான்களால் கையெழுத்திடப்பட்ட மலாயா யூனியன் ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்று அறிவித்தது. அதோடு, அக்கூட்டம் “மலாய் இனம் அதன் சொந்த மண்ணையும், ஆட்சியாளர்களையும் பெற்றிருப்பதைத் தடுக்க வேண்டாம்” என்று பிரிட்டீஷாரிடம் முறையிட்டுக் கொண்டது. அக்கூட்டத்தினர் பிரிட்டீஷாரை 1941 ஆம் ஆண்டு நிலவிய ஆட்சி நிலைக்கே திரும்புமாறு கேட்டுக் கொண்டனர்.


இந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல் பிரிட்டீஷார் மலாயன் யூனியனை ஏப்ரல் மாதம் 1946ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள்.


மிதவாத மலாய்க்காரர்களின் எதிர்ப்புத் தொடர்ந்தது. அதன் விளைவாக, சில உயர் அரசு அதிகாரிகளும் மற்றும் காவல் துறை அதிகாரிகளும் தங்கள் பதவிகளை விட்டு விலகினார்கள். இந்த நடவடிக்கை பிரிட்டீஷாரை அச்சத்திற்குள்ளாக்கியது. அவர்கள் தங்களின் நிலையை மறு ஆய்வு செய்யத் தொடங்கினார்கள்.


மலாயா கம்யூனிஸ்ட் கட்சியைப் பகைத்துக் கொண்டதைப் பிரிட்டீஷார் நன்கு உணர்ந்திருந்தனர். அக்கட்சியின் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் பிரிட்டீஷார் உணர்ந்திருந்தனர். மலாயாவை மீண்டும் இழப்பதற்காக அவர்கள் இங்குத் திரும்பி வரவில்லை. மலாய்த் தேசிய கட்சியின் கோரிக்கைகளையும் அதே கண்ணோட்டத்துடனே கண்டனர். மலாயா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலாய்த் தேசிய கட்சி ஆகியவற்றின் கோரிக்கைகளோடு மிதவாத மலாய்க்காரர்களின் கோரிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிதவாத மலாய்க்காரர்களின் கோரிக்கைகள் பிரிட்டீஷாரின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு எவ்வித தீங்கையும் உண்டாக்கவில்லை என்பதைப் பிரிட்டீஷார் உணர்ந்தனர். பிரிட்டீஷாரின் கணக்கில் மற்ற இரு கட்சிகளைவிட மிதவாத மலாய்க்காரர்கள் மிகப் பாதுகாப்பான கூட்டளியாகத் தென்பட்டனர். அவ்வளவுதான். பிரிட்டீஷார் செயல்படத் தொடங்கினார்கள்.


மிதவாத மலாய்க்காரர்கள் மற்றும் சுல்தான்கள் ஆகியோருடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள பிரிட்டீஷார் முடிவு செய்தனர். நாட்டிலுள்ள மற்ற தரப்பினர் அனைவரையும் ஒதுக்கிவிட்டு, அம்னோ தலைவர்கள் மற்றும் சுல்தான்கள் ஆகியோருடன் பிரிட்டீஷார் மிக ரகசியமாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, மலாயா கூட்டமைப்பு ஒப்பந்தத்தை (Federation of Malaya Agreement) உருவாக்கினார்கள். மலாயன் யூனியன் ஒரு முடிவிற்கு வந்தது. மலாயா கூட்டமைப்பு 1.2.1948 ஆம் ஆண்டில் பிரகடனம் செய்யப்பட்டது.


மலாயா கூட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி நாட்டில் நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் பிரிட்டீஷ் ஹைகமிஷனரிடம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு விலக்கு மலாய்ப் பாரம்பரியம் மற்ற முஸ்லிம் மதம். அவற்றுக்கான அதிகாரங்கள் மட்டுமே மாநில சுல்தான்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மலாயா கூட்டமைப்புச் சட்ட மன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்கள் உருவாக்கப்பட்டன. பிரிட்டீஷ் ஹைகமிஷனர் மட்டுமே அச்சட்ட மன்றங்களின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். நாட்டில் 15 ஆண்டுகள் வாழ்ந்து, மலாய் அல்லது ஆங்கில மொழியில் போதுமான தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் மலாயா கூட்டமைப்புக் குடியுரிமை பெறுவதற்கு வகை செய்யப்பட்டிருந்தது. சிங்கப்பூர் மலாயாவிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி காலனி ஆக்கப்பட்டது.


மலாயா கூட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மலாயா கம்யூனிஸ்ட் கட்சி, தீவிரவாத மலாய்க்காரர்கள், மிதவாத சீனர்கள், மற்றும் கற்றறிந்த இந்தியர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால், எதுவும் எடுபடவில்லை.

 

பிரிட்டீஷ் மக்களுக்குக் காலை உணவு இல்லை

 

மலாயாவைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காகப் பிரிட்டீஷார் எந்தக் கொள்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மீறக்கூடியவர்கள். பிரிட்டீஷ் பொருளாதாரத்தின் உயிர் நாடியாக விளங்கியது மலாயாவின் தோட்ட மற்றும் ஈயச்சுரங்கத் தொழிலாளர்களின் உழைப்பாகும்.


மலாயாக் கூட்டரசு அமைப்பை பிரகடனப் படுத்துவதற்கு 11 நாட்களுக்கு முன்பு, 20.1.1948ஆம் ஆண்டில் பிரிட்டனின் உணவு அமைச்சர் ஜோன் ஸ்ட்ரேச்சி தன் நாட்டின் பரிதாப நிலைகுறித்து இவ்வாறு கூறினார்:
“உண்மையிலேயே மிக மோசமாக இருக்கும் நமது நாட்டின் நிலைமை நாம் எவ்வாறு நமது காலனிகளுக்கு வளர்ச்சி திட்டங்களைக் கொணர்வது என்ற கருத்துப் பரிமாற்றத்தில் திளைத்திருப்பதை அனுமதிக்கவில்லை. எவ்வழியிலாகிலும், எப்படியாவது (“by hook or by crook") நமது காலனிகளில் தற்பொழுது உற்பத்தியாகும் அளவைவிட மிகப் பெருமளவில் எல்லாவிதமான மூலப்பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவது, இந்நாட்டுப் பொருளாதாரத்தின் வாழ்வு மற்றும் சாவு விவகாரமாகும் எனக் கூறினால் அது மிகையாகாது."


பெருமளவில் அமெரிக்க டாலர் சம்பாதிக்கும் திறன் பெற்றிருந்ததால் மலாயாவை பிரிட்டீஷ் பேரரசின் “டாலர் தொழிற்சாலை” என்று அழைத்தார்கள். சின் பெங் மலாயாவை பிரிட்டீஷ் பேரரசிலிருந்து பிரித்து விட்டால் பிரிட்டனின் கதி என்னவாகும்? பிரிட்டீஷ் பாராளுமன்ற உறுப்பினர் எல்.டி. கேமன்ஸ் கூறினார், “நாம் மலாயாவை இழந்துவிட்டால், இந்நாட்டு மக்கள் (பிரிட்டீஷார்) காலை உணவை இழக்க நேரிடும். ஆகையால், எப்படியாவது (“by hook on by Crook") சின் பெங் மலாயாவை பிரிட்டனிடமிருந்து பிடுங்கிக் கொள்வதைத் தடுத்தாக வேண்டும்.

அவசர காலம்


பிரிட்டீஷாரால் வஞ்சிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சி தனது இலட்சியமான சுதந்தர மலாயாவை அடைவதற்கு மலாயா காலனித்துவ அரசுடன் இறுதிப் போராட்டத்திற்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தது. சுரண்டப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கிய நற்சேவைகளின் மூலம் அக்கட்சி ஒரு சக்தி வாய்ந்த தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கியிருந்தது. மலாயாவின் மூலப் பொருட்களின் உற்பத்தியை முடக்கி பிரிட்டனுக்குப் பலத்த அடி கொடுப்பதற்குத் தொழிலாளர்களும் மற்றும் தொழிற்சங்கங்களும்தாம் சரியான ஆயுதங்கள். மலாயா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலாயா காலனித்துவ அரசு ஆகிய இரு தரப்பினரும் ஒருவரை மற்றொருவர் தோற்கடிப்பதற்குத் தொழிலாளர்களை ஆயுதமாக உபயோகிக்க எண்ணினர்.


வேலைநிறுத்தங்கள் தோன்றின. அலை அலையாகத் தொடர்ந்து வந்த வேலைநிறுத்தங்கள் நாடு முழுவதும், சிங்கப்பூர் உட்பட, பரவின. உற்பத்தியை நிலைநிறுத்துவதில் முதலாளிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். மலாயா காலனித்துவ அரசு தீவிரவாத தொழிற்சங்கங்களைக் கட்டுப்படுவதற்குத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. எல்லாத் தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டன. அதே நேரத்தில் தொழிற்சங்க இலாகா, தொழிற்சங்கங்கள், குறிப்பாகத் தொழிற்சங்க சம்மேளனங்கள், முறையாகப் பதிவு செய்து கொள்வதைத் தடுக்கும் நோக்குடன் சிரமங்களை உருவாக்கியது. தொழிற்சங்கங்களைப் பதிவு செய்யாமல், அவற்றைச் “சட்டவிரோதமானவை" என அறிவித்து, அச்சங்கங்களின் தலைவர்களை நாடு கடத்துவதற்கான திட்டம் ஒன்று இருந்தது. கவர்னர் ஜென்டிற்கு இத்திட்டம் தெரியாமல் இருந்திருக்கலாம்! காலனித்துவ அரசால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களைக் கொண்ட தொழிற்சங்களை உருவாக்குவதில் அரசு தீவிரமாகச் செயல்பட்டது! அரசால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் குறைந்த அங்கத்தினர்களைக் கொண்ட சிறிய சங்கங்கள். மலாயா கம்யூனிஸ்ட் கட்சி வழி நடத்திய தொழிற்சங்க இயக்கத்தின் முன் இச்சிறிய சங்கங்கள் எடுபடவில்லை.


தொழிற்சங்கங்களைத் தடை செய்து அதன் தலைவர்களை நாடு கடத்த வேண்டும் என்று முதலாளிகள், குறிப்பாகத் தோட்ட முதலாளிகள், கவர்னரிடம் கூக்குரலிட்டனர். கவர்னர் அவர்களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். தொழிற்சங்கத் தலைவர்களை நாடு கடத்த வேண்டும் என்ற திட்டத்தைத் தீவிரமாக வற்புறுத்தியவர் கவர்னர் ஜெனரல் மேல்கம் மெக்டோனல்ட் ஆகும். சிங்கப்பூர் புக்கிட் தீமாவில் 11.3.1947ஆம் ஆண்டில் நடந்த கவர்னர் ஜெனரலின் கூட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் மலாயா கவர்னர்களிடம் “நாடு கடத்தல் இல்லாமல் நாம் இக்கலகத்தை அடக்க முடியாது என்று நம்புகிறேன்" என கவர்னர் ஜெனரல் கூறினார்.


சிங்கப்பூர் கவர்னர் தான் சிங்கப்பூர் தொழிற்சங்க சம்மேளனத்தைப் பதவு செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டதாகக் கூறினார். அத்துடன், நாடு கடத்தல் உத்தரவை பயன்படுத்த அனுமதி கோரி இலண்டனிலுள்ள காலனி அமைச்சரிடம் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறினார்.


ஆனால், மலாயாவின் கவர்னர் “மலாயன் யூனியனில் தொழிற்சங்க சம்மேளனத்தின் பதிவை மறுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, அவ்வாறு செய்யும் எண்ணமும் இல்லை" என்று கூறினார்.


மேலும், “தொழிற்சங்கச் சம்மேளனத்தை சட்டப்பூர்வமான அமைப்பாகப் பதிவு செய்வதற்குத் தடைகளை உருவாக்குவதன் மூலம்" அரசாங்கம் “அச் சம்மேளனங்கள் சட்டவிரோதமான அமைப்புகளாக்கி நாடு கடத்தலுக்கு உட்படுத்துகிறது" என்று கவர்னர் எட்வர்ட் ஜென்ட் வாதித்தார்.


தனது நிலையை விளக்கிய ஜென்ட் “தொழிற்சங்க சம்மேளனங்கள் முறையான விதிகளைக் கொண்ட தொழிற்சங்கம் என்பதில் திருப்தி அடைந்தால் அவை பதிவு செய்யப் படும்" என்று கூறினார்.


ஆனால் மேல்கம் மெக்டொனல்ட் எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. “அவர்களை நாடு கடத்த வேண்டும். அவர்கள் நாடு கடத்தப்படவில்லை என்றால் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்”, என்று அடித்துக் கூறினார்.


கவர்னர் ஜென்ட் 21 தீவிரவாத நபர்களை நாடு கடத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முயற்சியில் கவர்னர் ஜெனரல் மேல்கம் மெக்டோனல்ட் தோல்வி கண்டார். இறுதியில், தொழிற்சங்க சட்டம் ஒரே நாளில், 31.5.1948ஆம் ஆண்டில், திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட அச்சட்டத்தின் கீழ் தொழிற்சங்க சம்மேளனங்கள் அனைத்தும் சட்டவிரோத அமைப்புகளாயின. அவ்வமைப்புகளுக்கு மரண அடி கொடுக்கப்பட்டதாக அரசாங்க அறிக்கை கூறியது.


நவம்பர் மாதம் 1946 ஆம் ஆண்டில் தொழிற்சங்க சம்மேளனங்கள் அர சாங்க சட்டத்திற்கு ஏற்ப பதிவு செய்து கொள்வதற்காக மனு செய்திருந்தன. இருபது மாதங்களுக்குப் பிறகு 12.06.1948ஆம் ஆண்டில் அச்சம் மேளனங்களின் மனுக்கள் நிராகரிக்கப் பட்டதாக காலனித்துவ அரசு தொழிற் சங்க சம்மேளனங்களிடம் தெரிவித் தது.


கவர்னர் எட்வர்ட் ஜென்ட் கூறியிரு ந்ததைப் போல் தொழிற்சங்க சட்டத் தில் திருத்தம் செய்ததன் மூலம் சட்டப்பூர்வமான தொழிற்சங்க சம்மேளனங்களைச் சட்டவிரோத அமைப்புகளாக ஆக்கியதில் கவர்னர் ஜெனரல் மேல்கம் மெக்டொனல்ட் வெற்றி கண்டார். ஆனால், அவர் விரும்பியவாறு தொழிற்சங்க தலைவர்களை அன்றைய சூழ்நிலையில் நாடு கடத்த முடியவில்லை. மாறாக, அவர்கள் காட்டிற்குள் விரட்டப்பட்டனர்.

 

13.06.1948 ஆம் ஆண்டில் மாநில தொழிற்சங்க சம்மேளனங்கள் மற்றும் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடை செய்யப்பட்டன. பேராக் மற்றும் ஜோகூர் மாநிலங்களில் மூன்று தோட்ட நிர்வாகிகள் கொல்லப் பட்டதைக் காரணம் காட்டி அம்மாநிலங்களில் 16.06.1948 ஆம் ஆண்டில் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது. ஜூன் மாதம் 18ஆம் தேதி அவசரகாலம் மலாயா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.


அவசரக்கால சட்டத்தின் கீழ் ஆயுதப்படையினர் மிகக் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இடச்சாரி தொழிற்சங்கவாதிகளும் மற்றும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்களும் வேட்டையாடப் பட்டனர். பிரிட்டீஷாரின் சிறைச்சாலை மற்றும் தூக்குக்கயிற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் காட்டை நோக்கி ஓடினார்கள்.


கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் முதல் துப்பாக்கிச் சூட்டை கிளப்பியது சிங் பெங் அல்ல. தன்னைச் சுட்டபோது அவர் திருப்பிச் சுட்டார்.


ஆயிரக்கணக்கானவர் கொல்லப்பட்டனர். ஆயிரமாயிரம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டனர். பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர். அன்று நடந்த சம்பவங்கள் குறித்து எழுதிய பிரிட்டீஷ் மலாயாவின் முன்னாள் அதிகாரியான விக்டர் பர்சல் (Victor Purcell) மலாயா நடைமுறையில் ஒரு போலீஸ் ஆட்சியாக (Police State) விளங்கிற்று என்று கூறியுள்ளார்.


பிரிட்டீஷ் பேரரசை பாதுகாப்பதற்காக இத்தனை அட்டூழியங்களும் நடந்தன. மலாயா உட்பட, பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட இராணுவ வீரர்கள் சின் பெங்ஙிற்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த இராணுவ வீரர்கள் பிரிட்டீஷ் மக்கள் அவர்களின் காலை உணவை இழக்காமல் இருப்பதற்காகத் தங்களின் உயிரை தியாகம் செய்ய வைக்கப்பட்டனர்.


பயங்கரவாதி சின் பெங்


பிரிட்டீஷாரின் நலன்களுக்காகச் சின் பெங் ஜப்பானிய போர் வீரர்களைக் கொன்றது கொலை அல்ல. அது பிரிட்டீஷ் பேரரசிற்கு அளித்த சேவை. அவர் ஒரு வீரன் (மறவன்). ஆனால், தனது நாடான மலாயாவிற்காகச் சின் பெங் பிரிட்டீஷ் போர் வீரர்களைக் கொன்றது கொலையாகும். அவர் ஒரு பயங்கரவாதி. இதுதான் பிரிட்டீஷ் நியாயபூர்வமான தர்க்கம்.


பிரிட்டீஷ் பேரரசில் இம்மாதிரியான இருவகை கௌரவம் பெற்றவர் சின் பெங் மாத்திரமல்ல. தென் ஆப்பிரிக்காவில் போயர் யுத்தத்தின் போது பிரிட்டீஷ் படையினருக்கு ஆற்றிய சேவைக்காக இரண்டு போர்ப்பதக்கங்களையும் கைசர்-இ-ஹிந்த் தங்கப் பதக்கத்தையும் பிரிட்டீஷார் காந்திக்கு வழங்கினார்கள்.


ஆனால், அதே காந்தி 1942ஆம் ஆண்டில் பிரிட்டீஷாரை “இந்தியாவைவிட்டு வெளியேறு” (Quit India) என்று முழங்கியதும் அவரை வின்ஸ்டன் சர்ச்சில் அரை நிர்வாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தார். காந்தி ஒரு பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டார். பிரிட்டீஷ் பேரரசு கடமை உணர்வுடன் அவரது பெயரை இன்ஸ் ஓப் கோர்ட்டின் (Inns of Court) வழக்கறிஞர் பெயர் பதிவு ஏட்டிலிருந்து நீக்கியது. பிரிட்டீஷ் பேரரசு அத்துடன் நிற்கவில்லை. பிரிட்டீஷ் பேரரசு தனது கொள்ளைக்கார் மனப்பாங்கின்படி நோபெல் பரிசு வழங்கும் குழு காந்திக்கு அமைதிக்கான நோபெல் பரிசு (Nobel Prize for Peace) வழங்கவிடாமல் தடுத்து விட்டது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன்வாலா பா என்ற இடத்தில் ஆயுதம் ஏதும் ஏந்திராத இந்தியர்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கொல்லும் நோக்கத்தோடு ஜெனரல் டையர் 1650 குண்டுகளைப் பொழிந்தார். 379 பேர்கள் கொல்லப்பட்டனர். 1137 பேர்கள் காயமுற்றனர், மொத்தம் 1516 பேர்கள் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் பிரிட்டீஷாரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஜெனரல் டையர் இந்தக் கொலைகளைப் புரிந்தார். “அனைவரையும் சாகடிப்பது என்று முடிவு செய்துவிட்டேன்”, என்று ஜெனரல் டையர் பகிரங்கமாகக் கூறினார். பிரிட்டீஷ் பேரரசு ஜெனரல் டையரை ஒரு பயங்கரவாதி என்று கூறவில்லை. ஆனால், தனது தாயகமான இந்தியாவின் நலன்களுக்காக இந்தியாவில் ஆங்கிலேயர்களைக் கொன்ற பகத் சிங் ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் நீதி!


நமது காலத்தில் வாழ்ந்த யாசர் அரபாத் ஒரு பயங்கரவாதி என்று உலக முழுவதும் பறைசாற்றப்பட்டது. ஆனால், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெகின் மெனசெம் உண்மையிலேயே ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டார். அவர் ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்படவில்லை.


ஒருவர் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்படுவது அவர் யாருடைய நலன்களுக்காகச் சேவை செய்தார் என்பதைப் பொறுத்திருக்கிறது. பிரிட்டீஷார் மலாயாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரியதன் மூலம் சின் பெங் மலாயாவின் நலன்களுக்காகப் போரிட்டார். ஆகையால், அவர் ஒரு பயங்கரவாதி.


தேசபக்தர்களுக்குத் தேச பக்தர்


இந்தியாவின் சுதந்திரப் போராட்ட மாவீரன் சந்திரபோஸ் இந்தியா பிரிட்டனிடமிருந்து சுதந்தரம் பெறுவதற்குக் காந்தியின் போராட்ட முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் பிரிட்டீஷாரை இந்தியாவிலிருந்து அடித்து விரட்ட வேண்டுமென்று விரும்பினார். பிரிட்டீஷ் சிறையிலிருந்து தப்பித்த சந்திரபோஸ் ஹிட்லர் மற்றும் தோஜோவுடன் ஒன்று சேர்ந்தார். அவர்களின் ஆதரவுடன் ஜப்பானியர்கள் பிடித்து ஆண்டு கொண்டிருந்த மலாயாவிற்கு வந்தார். இங்கு இந்திய தேசிய இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சந்திர போஸ் மலாயாவில் தனது அஜாத் ஹிந்த் அரசை அமைத்தார். பிரிட்டன் மற்றும் அமெரிக்கா நாடுகளின் மீது முறையான போர்ப் பிரகடனம் செய்தார். அவரது இந்திய தேசிய இராணுவ வீரர்கள் பிரிட்டீஷ் இந்திய இராணுவ வீரர்களுடன் பர்மாவில் போரிட்டனர். பிரிட்டீஷார் சந்திரபோஸை பிடிப்பதில் தீவிரமாக இருந்தனர். சந்திரபோஸ் அகப்பட்டிருந்தால் அவரை அதே இடத்தில் தூக்கிலிட்டிருப்பார்கள்.


சந்திரபோஸ் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் காந்தி 6.6.1942 ஆம் ஆண்டில் சந்திரபோஸின் தாயாருக்குத் தனது அனுதாபச் செய்தியை அனுப்பினார். பின்னர், சந்திரபோஸ் இறந்து விட்டதாகக் கிடைத்த செய்தி தவறானது என்று தெரிய வந்தது.


காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான அமெரிக்கர் லூய்ஸ் பிஸ்செர் (Louis Fischer) காந்தியுடன் தங்கியிருந்தார். காந்தி சந்திரபோஸின் தாயாருக்கு அனுதாபச் செய்தி அனுப்பியிருந்ததைத் தெரிந்து கொண்ட பிஸ்செர் அதிர்ந்து போனார். பாசிச ஜெர்மனிக்குச் சென்று அதனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட ஒரு மனிதர் இறந்ததற்கு நீங்கள் எப்படி அனுதாபம் தெரிவிக்கலாம் என்று காந்தியைக் கேட்டார். அதற்கு காந்தியின் பதில்:
“நான் அனுதாபச் செய்தி அனுப்பினேன், ஏனென்றால் நான் போஸை தேசபக்தர்களுக்கெல்லாம் தேசபக்தராகக் கருதுகிறேன். அவர் தவறு செய்திருக்கக்கூடும். அவர் தவறு செய்தார் என்று நினைக்கிறேன். நான் போஸை பல தடவை எதிர்த்திருக்கிறேன். இருமுறை அவரை காங்ரச&